விடு பாப்பா ... எடுத்துட்டு போகட்டும் ...
அம்மா…அம்மா…பாரும்மா…நம்மளைமனுஷன் போட்டோஎடுக்குறான். எடுத்துட்டுப்போறான்டி… விடு… அவனும் நம்மளை மாதிரி காட்டக்குள்ளே அலைஞ்சான்கிறதை மறந்துட்டான்.இப்ப நம்மளை பாக்க அவனுக்கு வினோதமா தெரியுது.
நம்ம பூட்டன் அடிக்கடி சொல்வாராம் …இந்த மனுஷப்பய காட்டைவிட்டுப் போனான் …நாற்றம் குறைஞ்சிருச்சுன்னு. கண்டதை திங்கிற பயலுகன்னு பூட்டன் அடிக்கடி திட்டுவாராம். அவங்களைப் பாக்குறதுக்கு அறுவருப்பா இருக்குமாம். இப்பதான் என்னத்தையோ ஆடைன்னு போட்டுக்கிட்டு அலையுறாங்கே. ஆயிரம் சேட்டைகளை செய்யுறவங்கே அவங்கே…பேரு மட்டும் நம்ம பேராம் கொரங்கு சேட்டைன்னு சொல்றாங்கே.
கோணலும் மாணலுமா சிந்திப்பாங்கே …கடைசியா குரங்கு புத்தின்னு சொல்லுவாங்கே…நம்ம புத்தி அப்படியா இருக்கு …இவங்களே கண்டுக்கிறாதே…பாத்தா ஒரு உறுமு உறுமு ,பத்தடி பின்னாலே போயிருவாங்கே. இவங்ககிட்டே எப்பவுமே தூரமா இருக்கனும் …அண்டவிடக்கூடாது. நம்ம பொழப்பையும் கெடுத்திருவாங்கே.
பெத்த பிள்ளையெ பாத்து சொல்லுவாண்டி…என்ன கொரங்கு குட்டி மாதிரி பெத்துருக்கைன்னு.
ஏன்னா…மனஷங்கள்லாம் நம்ம வம்சம்…பங்காளிக…என்ன அவன் நாட்டுப்பக்கம் போயி கொஞ்சம் முன்னேறிட்டான். நம்ம காட்டக்குள்ளேயே இருந்துட்டோம். அதனாலேதான் அந்தப் பயலுகளுக்கு நம்ம மேலே கொஞ்ச பாசம் …மறக்க மாட்டானுக நம்மளை. காட்டுப் பக்கம் கோயிலை கட்டி வச்சு சாமி கும்பிட வர்ற மாதிரி வந்து அப்பப்ப கடலை பொறின்னு நமக்கு தர்றாங்கே …பாசக்கார பயலுக.
பாசக்கார பயலுகலா இருந்தாலும் இவங்களே நம்பக்கூடாது. தூக்குன்னா ஒரேதா தூக்குவாங்கே , கீழே போட்டா உச்சில இருந்து பொத்துன்னு போடுவாங்கே.
சீ…கொரங்கே போன்னு விரட்டுறவன் …எப்பயாவது தனியா அவன் வீட்டுப்பக்கம் போயிட்டம்ன்னா ராமரோட பக்தன்னு சொல்லி கண்ணத்திலேயும் காதுலயும் போட்டுக்கிட்டு , நாம நடந்து போன காலடி மண்ணை எடுத்து நெத்தில பூசிக்கிருவாங்கே. அப்படிபட்ட பயித்தியகார பயலுக இவங்ககிட்ட இருந்து ஒதுங்கியிருக்கிறதுதான் நல்லது. அப்பாவை பாத்தியா இவங்களைப் பாத்தா திரும்பக் கூட மாட்டாரு.
நமக்கும் இவங்களுக்கும் கொஞ்சம்தானம்மா வித்தியாசம் …சம்பந்தம் பண்ணிருந்தா நம்மளும் அவங்களை மாதிரி பிள்ளகைளைப் பெத்துக்கிட்டு நாட்டுப்பக்கம் போயி நாகரீகமா வாழலாமே!
சீ…மூடு வாயை …எதை நாகரீகம்ங்கிறே …என்ன நாகரீகத்தை அவங்ககிட்டே கண்டே …நீ யோசிக்கிறதுக்கு முன்னாடியே …மனுஷன் நம்மகிட்டே சம்பந்தம் செய்ய ஆசைப்பட்டான் . யோசிச்சு முடிவுக்கு வந்து நம் முன்னோர்கள் ஒரு வழியா சம்மதிச்சாங்க . அவங்கே நமக்கு பொண்ணு கொடுக்கிறதா சொன்னாங்கே …நம்மளும் சரிண்ணுட்டோம்.
கல்யாணத்தண்ணைக்கு நம்ம மாப்ளை அழகான பூ மாலை செய்து கொண்டு வந்தார். கல்யாணம் அடர்ந்த காட்டுக்குள்ளே ஒரு ஆல மரத்துல நடந்துச்சாம் . நம்ம மாப்ளை மூணு நாலு மைலுக்கு அப்பாலு இருந்து வரணும் . அங்கிருந்து பூ மாலையை எடுத்துட்டு மரம் மரமா தாவி குடும்பத்தோட வந்தாங்க .
ஆலமரத்துக்கு அடில வந்து பாத்தா ஒரே மனுஷ கூட்டம். நம்ம மாப்ளைக்கு ரெம்ப சந்தோசம் …பொண்ணை கூட்டி வந்தாங்க …மாலையை மாத்துங்கப்பா…அப்பதான் நம்ம மாப்ளை கையில உள்ள மாலையை பாக்குறார்…வெறும் நாருதான் இருக்கு.
மாலை எங்கப்பா…ஆளாளுக்கு கேக்குறாங்க .
இதாய்யா மாலை…பூவெல்லாம் வர்ற வழில உதிந்திருச்சு.
அட என்னய்யா நீங்க… நான்தான் சொன்னேன்ல அப்பவே…கொரங்கு கைல சிக்குன பூமாலை எப்படி இருக்கும் …அட போங்கப்பா …பூப்போல வளத்த ஏம் பொண்ணே கொரங்கு கையில கொடுத்தா , கொரங்கு கையில சிக்குன பூ மாலையாகவா… போதும் …போதும் கல்யாணம் நிறுத்துன்னு சொல்லி பொண்ணை அழைச்சிட்டு போயிட்டார்.
எவ்வளவோ நம்ம ஆளுக கெஞ்சிப்பாத்தாச்சு …கேட்டுப்பாத்தாச்சு…மனுஷங்க செவிசாய்க்கல.அன்னைல இருந்து இன்னை வரைக்கும் அவங்க யாரோ நம்ம யாரோதான்.
நீ …சின்னப் பொண்ணு உனக்கு அனுபவம் பத்தாது இந்த மாதிரி யோசனையெல்லாம் தூக்கி எறிஞ்சிரு.
சின்னப்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பாங்கே , தீபாவளிக்கொரங்கே திண்ணையை விட்டு எறங்கேன்னு.
எந்த தீபாவளிக்கு எந்த திண்ணையில போயி உக்காந்தோம் …சொல்லு பாப்போம். அப்பப்பா …இந்த மனுஷங்களை நினைச்சா பத்திக்கிட்டு வரும்.
அவங்களுக்குள்ள சாமியாருன்னு கொஞ்சப்பேரு இருக்காங்கே…அவங்க சொல்றாங்கே மனுஷனுடைய மனசு நம்மளை மாதிரியாம். அவங்க அதை அடக்கனும்மாம். பாரு வேடிக்கையெ …நம்ம இங்க செவனேன்னு குடும்பத்தோட உக்காந்து உன்னை நாம்பாக்க என்னை நீ பாக்கன்னு இருக்கோம் .அவங்க மனசை நம்மளோட சேக்குறாங்கெ.
மொத்தத்துல மனுஷப்பயலுக்கு அவனுக்கு மேலே யோசிக்கத் தெரியலை…காட்டுல வளந்த பயதானே! அதனாலே அவென் என்ன செஞ்சாலும் காட்ல இருக்கும் நம்ம மாதிரி இனத்தோட பேரைத்தான் தன்னோட சேத்துக்கிறான் .கோழைப்பய…சிங்கம் போல வீரம்ங்கிறான் …ஏன் அவனுக்கு வீரம்னு ஒன்னு இல்லையா…குதிரை போல வேகம்ங்கிறான் …ஏன் அவனுக்குன்னு ஒரு வேகம் இல்லையா.
இவங்ககிட்ட உக்காந்து ஒரு நாளைக்கு விலாவாரியா பேசனும்னு தோணுது …ஆனா எவங்கிட்ட பேசுறது.
விட்டுரு பாப்பா…அவன் அவனா இருக்கட்டும் நாம நம்மளா இருப்போம். என்னைக்கொ ஒரு நாள் நம்ம பக்கம் வர்றான் …பாவம் நம்மளை போட்டோ எடுத்துட்டுப் போறான்.
ஆனா ஒன்னு …நம்ம காடு எவ்வளவு அருமைன்னு இங்க இருக்கும் வரை தெரியாது .அவங்க எடத்துக்குப் போயேன் …அங்கேயும் இங்கேயுமா கருப்பா பட்டை பட்டையா ஏதோ இருக்கு . அதைப் போயி ஏதோ ரோடுங்கிறான் .அதுல பயங்கரமா சத்தத்தோட பெருசு பெருசா என்னமோ ஓடுது அதப்போயி காருங்கிறான் லாரிங்கிறான். அதுமட்டுமா…மரம் மாதிரி எதையோ பாதையோரமா நட்டு அதுல கம்பியை மாட்டியிருக்கான்
கீழ ஏதோ தொங்குது அதுல இருந்து வெளிச்சம் வருது. உன்னோட முப்பாட்டனார் இப்படித்தான் ஒரு காலத்துல இவங்க எப்படி வாழ்றாங்கன்னு பாக்க மெதுவா அவங்க எடத்துக்குப் போனார் . அந்த மரமாதிரி உள்ளதுல …ஆமா…அதை கரண்டு போஸ்ட்டுன்னு சொல்றாங்கே அது மேலே ஏறின்னா எல்லாத்தையும் பாக்கலாம்ன்னு ஏறிருக்கார் …பாதி வழிலேயே எதையொ புடுங்கி வெரலை வச்சு பாத்திருக்கார் .அவ்வளவுதான் தூக்கி எறிஞ்சிருச்சாம் . முப்பாட்டனார் அந்த இடத்துலேயே செத்துப்போயிட்டாராம். சதிகாரப்பயலுகன்னு தாத்தா திட்டுவார் .
நம்ம அவங்க பக்கம் எப்பவாவது போவோம்னு தெரிஞ்சுதான் சதி பண்ணி வச்சிருக்காங்கே.
இவங்களை பாக்குறதே பாவம் …எல்லோரும் ஒரு பக்கமா திரும்பிக்கோங்க …போட்டோதானே எடுத்துட்டு போகட்டும்.
Comments
Post a Comment