ஒரு நாள் …இரவு ஜெயித்தது…
வருங்காலத்தில் தனியார் துறையில் தான் அதிக ஊதியம் கிடைக்கும் என்று 50 வருடங்களுக்கு முன்பே கணக்கு போட்டு அரசு வேலைக்கு போவதை தவிர்த்தவர் மதியழகன். அன்று அவருக்கு இருந்த படிப்புக்கும் அறிவுக்கும் ஏதாவது அரசு துறையில் வேலை கிடைத்திருக்கும். அவருடைய பேச்சை கேட்டு அவரது வீட்டில் யாருமே அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யவில்லை.
பக்கத்து வீட்டாரெல்லாம் அரை காசா இருந்தாலும் அரசாங்க காசா இருக்கனும்ன்னு தன்னோட பிள்ளைகளை அரசாங்க வேலைக்கு தயார் படுத்தினாங்க. அந்த கால கட்டத்தில அரசாங்க வேலை கிடைப்பது குதிரை கொம்பாத்தான் இருந்துச்சு.அப்படி இருந்தாலும் விடாமுயற்சியால தனக்கு தெரிந்த அரசியல்வாதி , அதிகாரிகளின் காலை கையை புடிச்சு கவர்மென்ட் வேலை வாங்கிட்டாங்க.
ஆனா, மதியழகன் மட்டும் தன்னுடைய வரட்டு கௌரவம், வரட்டு தத்துவங்களாலே அரசு வேலைக்கு முயற்சி செய்யாமெ தனியார் கம்பெனிகளுக்காக பிரதிநிதியாக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தார்.
மதியழகா…கல்யாணம் காட்சி பண்ணனும் ஊர் ஊரா சுத்துற இந்த வேலையெ விட்டுட்டு அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணுப்பா… இல்லைன்னா வேற நல்ல வேலையா ஒரு இடத்துல இருந்து பாரு. அம்மா அழாத குறையாக சொல்வாங்க.
அப்பாவை பாத்தீயா 30 வருசம் காலத்தை ஓட்டிட்டார் . பத்தாததுக்கு பென்சன் வேறே…
மதியழகன் அதுக்கொரு விளக்கம் கொடுப்பாறே தவிர, ஒரு போதும் சரிம்மான்னு சொன்னது இல்லை.
கல்யாணம் ஆச்சு…இரண்டு குழந்தைகளாச்சு …அவருக்கு வயசும் 58 ஆச்சு…இன்னும் விற்பனை பிரதிநிதி தான்.
குழந்தைகள் இப்போது தான் படிப்பை முடித்திருக்கிறார்கள்.
குடும்ப பாரம் முழுவதும் மதியழகன் தான் சுமக்க வேண்டும்.
தனது கொள்கையாலும் வரட்டு கௌரவத்தாலும் வாழ்க்கையில் எத்தனையோ கஸ்ட்டங்கள்.
இடையிடையே வேலையில்லாமல் திண்டாடுவதும் உண்டு.
இத்தனை கஸ்டங்களையும் தாண்டி தன் மகளுக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
ஒரு நாள் வெளியூர் சென்று வீடு திரும்பி சிறிது ஓய்வெடுத்த பின்பு எழுந்தார்…அவரால் எழ முடியவில்லை.
இடுப்பில் ஒரு பிடிப்பு….அப்பப்பா…என்று முனகிக்கொண்டே எழ ஆரம்பித்தார். நல்ல வலி.
டாக்டரை சென்று பார்த்தார் .
டாக்டர் சொன்னார் இரும்புசத்து குறைபாடுனாலே வந்துருக்கு என்று மருந்து எழுதி கொடுத்தார்.
பதினைந்து நாள் சாப்பிட்டும் குணமாகவில்லை…இரும்பு சத்து அதிகமாகிவிட்டது அதை குறைக்க வேண்டும் என்று மாத்திகைள் எழுதி கொடுத்தார். அதை சாப்பிட்டும் சரியாகவில்லை.
வேறொரு மருத்துவரிடம் சென்றார்.
அவர் இடுப்புக்கு ஒரு பெல்ட் கொடுத்து , நல்லா ரெஸ்ட் எடுங்க 15 நாள் கழிச்சு வாங்க என்றார்.
வலி இன்னும் மோசமாகிக் கொண்டுதான் போனது.
வேறொரு மருத்துவரிடம் சென்று காண்பித்தார்…
அவர் ஸ்கேன் எடுக்க எழுதி கொடுத்தார்…
ஸ்கேன் ரிப்போட்டைப் பார்த்து டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.
மதியழகன்…நீங்க வீட்டுக்கு போங்க நான் ஸ்கேன் ரிப்போர்ட்டை ஸ்டடி பண்ணிட்டு உங்க மகன் கிட்ட கொடுத்து விடுறேன். டாக்டர் சொன்னார்.
கார்த்தி அப்பாவை வீட்டில் இறக்கிவிட்டு வந்தான்.
டாக்டர்…
வாப்பா…கார்த்திக்
ஸ்கேன் பாத்தேன். அப்பாவுக்கு ப்ராஸ்டேட் கேன்சர் இருக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது.
கார்த்திக்கு காலுக்கடியில் பூமி இரண்டாக பிளந்து செல்வது போல் உணர்ந்தான். கண்கள் இருண்டது.
இப்ப என்ன செய்யுறது டாக்டர்…
நான் ஒரு டாக்டரை ரெபர் பண்றேன் அவரை போயி பாருங்க.
அப்பாவுக்கு தெரிய படுத்திடலாமா டாக்டர்…
தாங்கிக்குவாரா?
நிச்சயமா தாங்கமாட்டார் டாக்டர்
அப்ப சொல்லாதே எப்படியாவது சமாளி.
டாக்டர் …ஒரு வேண்டுகோள் நீங்க ரெபர் பண்ற டாக்டர்கிட்டேயும் சொல்லுங்க அப்பாக்கு என்ன நோய் ன்னு தெரிய வேண்டாமென்று.
சரி…நான் பேசிக்கிறேன்.
தேங்க்யூ டாக்டர் விடைபெற்றான்.
ரெம்ப நெருங்கிய உறவுகளை அழைத்து ஸ்கேன் ரிப்போர்ட்டை காண்பித்தான். அவர்களும் அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னார்கள். அப்பாவுக்காக ஸ்கேன் ரிப்போர்ட்டையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. அப்பா கண்ணில் பிரிஸ்கிரிப்ஸனோ ஒரிஜனல் ஸ்கேன் ரிப்போர்ட்டோ படாதபடி பார்த்து கொண்டான் கார்த்தி.
மதியழகன் படு கில்லாடி டாக்டர் எழுதியிருக்கும் பிரிஸ்கிரிப்சன் வைத்தே தனக்கு என்ன நோய் என்று எழுதில் கண்டு பிடித்து விடுவார்.
அடுத்த நாள் மதியழகனை அழைத்து கொண்டு அங்குள்ள மல்டிபெசாலிட்டி ஹாஸ்பிட்டலில் டாக்டர் ரெபர் செய்த டாக்டர் மூர்த்தியை சந்தித்தான்.
டாக்டர் எல்லாம் சொல்லிருக்கார்…பயப்பட வேண்டாம் கார்த்தி நான் பாத்துக்கிறேன்.
அப்பாவை…பெயின்கில்லர் டிபார்ட்மென்டுக்கு கூட்டி வாங்க
சரி…டாக்டர்
எனக்கு என்னாச்சு டாக்டர்…
ஒன்னுமில்லை …மதியழகன் ரெண்டு நாளைக்கு பெயின் கில்லர் தர்றேன்…அப்புறம் வந்து என்னைப்பாருங்க. ஒரு இன்ஞ்சக்சன் போட்டார்.
சரி…நீங்க போயி வெளில வெயிட் பண்ணுங்க…
கார்த்தி …அப்பாவுக்கு 3வது ஸ்டேஜ் தாண்டிருச்சு…அவரை ஹீமோ அது இதுன்னு கொடுத்து தொந்தரவு பண்ண வேண்டாம்.
கார்த்தி மௌனமானான்… டாக்டர் மருந்து எழுதி கொடுத்தார் அதை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
உறவுகள் கூடி ஆலோசித்தது.
அடையார் கூட்டிட்டு போயிறலாமா
மதியழகனுக்கு தெரிஞசுறுமே…
பரவாயில்லை…அங்கே போனதுக்கு அப்புறம் தெரிஞ்சா தெரியட்டும்
எனக்கு தெரிஞ்ச மலையாள ஆயுர்வேத மருத்துவர் ஒருத்தர் இருக்கார் அவரை வரச்சொல்லவா…வீட்டுல இருந்து வைத்தியம் பார்ப்பார்…இது போல நோய்களை நிறைய பேருக்கு குணப்படுத்தியிருக்கார்.
குழந்தைகளால் முடிவெடுக்க முடியவில்லை. முக்கியமாக பணம் வேண்டுமே…
உறவுகள் கூடி கூடி விவாதித்தார்களே தவிர யாராலும் முன் வந்து முடிவெடுக்க முடியவில்லை.
இறுதியாக கேரள ஆயுர்வேத வைத்தியம் பாக்கலாம் என முடிவுக்கு வந்தார்கள்.
கேரள மருத்துவர் அழைத்து வரப்பட்டார். சிகிச்சை தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் உடலில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. சிறிது நாட்களுக்கு பின் மருந்து வேலை செய்யவல்லை.
அலோபதி டாக்டர்கள் ஆரம்பத்தில் சொன்ன அறிகுறிகள் தென்பட தொடங்கியது. தூக்கமின்மை, கோபம், வலி, அதனால் அவர் ஏற்படுத்தும் சத்தம். தாங்க முடியவில்லை.
இடையிடையே மருத்துவமனை சென்று சில நாள் தங்கி சிகிச்சை பெற்றார்.
நோய் ஒருநாள் இரவு ஜெயித்தது. வானமே இரக்கப்பட்டது போல மழை அந்த நேரத்தில்.
கடுமையான உழைப்பாளி இருந்தும் அவர் சிகிச்சைக்கு கூட அவரால் பணம் சம்பாதிக்க முடியவில்லை.
வாழ்நாள் முழுக்க கஸ்டப்பட்ட ஒரு மனிதனுக்கு கடவுள் ஏன் இவ்வளவு மோசமான நோய் கொடுத்தான் என்ற கேள்விக்கு இன்று வரை எனக்கு பதில் இல்லை.
Comments
Post a Comment