இதுக்குப்போயா...

 என் தலைவன் நேர்மையானவன்பாரபட்சம் பார்க்காத தலைவன்எதற்கும் குரல் கொடுக்கும் முதல் தலைவன்முதிர்ந்த தலைவன்அவனைப்பற்றி உங்களிடம் பேச பெருமை கொள்கிறேன் நான்…         இதைப்படிச்சு பாருங்கவீராச்சாமி தனது டிவிஎஸ்50 யை நிறுத்திவிட்டு பேப்பரை நீட்டுவது வழக்கம். அதில் அந்த தலைவனைப்பற்றிய செய்தியோ அல்லது அவர் எழுதிய கவிதையோ இருக்கும்.


வீராச்சாமி அரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்று இப்போது அரசியலை சமூகப்பணியாக செய்வதாக நினைத்து கொள்பவர் . தனது சாதி சார்ந்த அரசியல் தலைவன் என்பதால் அவரைப்பற்றி அதிகமாகவே பேசுவார் . நல்ல மனிதர் . வசதியாக வாழ்பவர்.

சொந்த செலவில் நோட்டீஸ் அச்சடித்து விநியோகம் செய்வார் . அப்படி கொடுக்கும் போது ஒரு வார்த்தை சொல்வார் ... சார்உங்களாலே முடிஞ்சா ஜெராக்ஸ் எடுத்து பத்து பேருக்கு கொடுங்க. இப்படியாக அரசியல் செய்பவர் . அதனால் அவருக்கு எவ்வித பலனும் இல்லைஅவரை சார்ந்தவருக்கும் எந்த பலனும் இல்லை. அரசியல் சார்ந்து இருப்பதே அவருக்கு பலம் என்று நினைக்கிறாரோ என்னவோ!.

வழியில் நண்பர்களை எங்கு பார்த்தாலும் சிரம் தாழ்த்தி வணங்குவது அவரது வழக்கம் . வயது அறுபதை தாண்டினாலும் அவரது பணிவு அனைவரையும் சிலிர்க்க வைத்துவிடும். மாதவனுக்கு நல்ல நண்பர்.

மாதவன் சகோதரி வீட்டில் காம்பவுண்டு சுவர் கிடையாது, இரும்புகம்பிகளால் ஆன தட்டிகளே காம்பவுண்டு சுவராக இது நாள் வரை பயன்படுத்தபட்டு வந்தது.

மாதவன் சகோதரி காஞ்சனாவின் மகன் தனது பழைய கார் ஒன்றை அனுப்புவதாக சொன்னான்.

காரை பாதுகாக்க வேண்டுமானால் கட்டாயம் காம்பவுண்டு சுவர் தேவை.
காஞ்சனா காம்பவுண்டு சுவர் கட்ட இஞ்சினியரை அழைத்து , பழைய இரும்பு கம்பி தட்டிகளை கழட்டி வைத்தாள்.

வழிப்போக்கரின் கண்கள் அந்த பழைய இரும்பு கம்பி தட்டிகளை நோட்டமிட்;டவாறே சென்றது. சிலர் அதை விலைக்கு கேட்கவும் செய்தனர். அந்த வழியாக வந்த வீராச்சாமியும் அதற்கு விதிவிலக்கல்ல.

வீட்டருகில் டிவிஎஸ்50 யை நிறுத்தி காஞ்சனாவை அழைத்து இந்த இரும்புகம்பி தட்டிகளை எனக்கு தாருங்களேன் என்றார்.

இதுஎனது தம்பி மாதவன் வீட்டிற்கு தேவைப்படுகிறது என்று சொன்னாள் காஞ்சனா.

கோடிகோடியாக பணம் செலவழித்து வீடு கட்டினாலும் , இது போன்ற பழைய பொருட்களை காணும் போது அதிலும் சிலருக்கு ஆசை வருவது வேடிக்கையாக இருக்கிறது”.

மாதவன் வந்தவுடன் காஞ்சனா வீராச்சாமி வந்ததையும் அவர் இந்த இரும்புக்கம்பி தட்டிகளை கேட்டதையும் சொன்னாள். மாதவன் அப்படியா என்று கேட்டுவிட்டு வேறு எதுவும் பேசவில்லை.

இரண்டு மூண்று தினங்கள் கழித்து மாதவன் வாக்கிங் சென்று கொண்டிருந்தான். வீராச்சாமி எதிரே வந்தார். மாதவன் வழக்கம் போல வணக்கம் சொன்னான். வீராச்சாமி கவனிக்காததைப்போல வேறு பக்கமாக தலையை திருப்பி சென்றுவிட்டார்.

தலைதாழ்த்தி வணக்கம் சொல்பவர் தலையை திருப்பிக்கொண்டு செல்வது மாதவனுக்கு வியப்பாக இருந்தது.

Comments